புத்த பூர்ணிமாவை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

புத்த பூர்ணிமாவை விடுமுறை தினமாக அறிவிக்க தமிழ்நாட்டிலுள்ள பல பௌத்த சங்கங்கள், பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.  பல சங்கங்கள், இந்தக் கோரிக்கியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களிடம் வைத்தனர்.  நிலாதம்மா வைத்த கோரிக்கைகளையும் முதல்வர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்த கடிதத்தின் நகல் கிடைத்தது.


விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் அவர்கள் இது குறித்து தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  அந்தவகையில் வழக்கை முன்னெடுத்த சகோதரர் அவர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும்.




வரும் 4-ஏப்ரல்-2023, விடுமுறையாக அறிவித்து பள்ளிகளில் இருந்து தகவல் வந்தது.  அன்றைய தினம் மஹாவீர் ஜெயந்தியாகும்.  ஆக, தமிழக அளவில் பௌத்தர்களின் மக்கட்தொகை அளவே இருந்தாலும் ஜைனர்களின் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


பௌத்தர்களாகிய நாம் இதனை சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய தருணம் ஆகும்.  


இம்மண்ணினை பண்பாட்டு அடிப்படையில் செழிப்படையச் செய்த இரு சமயங்கள் சிரமண சமயங்களான பௌத்தமும் ஜைனமுமாகும்.


பாபாசாகேப் அவர்களின் முயற்சியைத் தொடர்ந்து இம்மண்ணில் பௌத்தம் மீட்சிபெறத் தொடங்கி, சமூக வலைத்தளங்கள் வருகையால் ஸ்திரப்பட்டு வருகிறது.  தற்போதைய நம்முடைய தேவையாக, ஆங்காங்கு இயங்கி வரும் பௌத்த சங்கங்கள், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தோடாவது ஒன்றிணைந்து இயங்கவேண்டிய காலகட்டத்தில் நாமுள்ளோம்.


ஒவ்வொரு பௌத்த சங்கமும் அவர்கள் இயங்கும் பகுதி சார்ந்த பிரச்சினைகள், சவால்கள் குறித்து இயங்கவும், குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு தமிழக அளவில் மற்ற சங்கங்களோடு இணைவது நம்மை வலுவாக்கவும், நமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் வழிவகுக்கும்.

 

No comments:

Post a Comment