"பௌத்தம், புத்தம், புத்தர்" என்ற சொற்கள் "புத்தி" எனும் சொல்லிலிருந்து வந்தவை. பௌத்தம் என்பதன் பொருள் "விழிப்புடனிருத்தல்" எனலாம்.இந்த தத்துவம் சித்தார்த்த கௌதமர் என்று அழைக்கப்பட்ட ஒரு தனி மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் கண்டுபிடிக்கப்பட்ட வழியாகும். அந்தச் சித்தார்தக் கௌதமர் எனும் புத்தரே, தனது 35வது வயதில் தான் இந்த பேரறிவாகிய "புத்த நிலை" எனும் விழிப்பு நிலையை அடைந்தார். பௌத்தம் கிட்டத்தட்ட 2500 ஆண்டு கடந்த ஒரு தத்துவமாகும். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் உலகம் முழுவதும் 495 மில்லியன்கள் உள்ளனர். நூறாண்டுகளுக்கு முன்புவரை, ஆசிய மக்களால் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்தத் தத்துவம் இன்று ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்க மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுவருகிறது. உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸடீன் முதல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் வரை புகழப்பட்ட மதமாக அது விளங்குகின்றது.
பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட காணொளி!
பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்,
பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் மணிமண்டபம்,
சென்னை.
பங்குனித் திங்கள் பௌர்ணமி ( March )
பூரண ஞானம் பெற்ற கௌதம புத்தர் முதன்முதலாக இராஜகிருகத்திலிருந்து கபிலவஸ்துவுக்கு இன்றைய பௌர்ணமியில் புறப்படுதல்.
![]() |
சுத்தோதனர் அனுப்பிய தூதுவர்கள் கௌதம புத்தரை அணுகுதல் |
கௌதம புத்தர் இராஜகிருகத்தில் வசித்து வரும் சமயம் மென்மையான தம்ம போதனை செய்த செய்தி மாமன்னர் சுத்தோதனர் காதில் எட்டியதும் பூரண ஞானம் பொலிந்த மகாஞானியாகிய மகனை காண ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. இதன் விளைவாக அவர் தொடர்ந்து 9 தடவைகள் 9 அரசவையினர் மூலம் கௌதம புத்தருக்கு தூதுவர்களாக கபிலவஸ்து வரும்படி வேண்டினார். எதிர்பார்த்த செய்திக்கு முரண்பாடாக அவர்கள் அனைவரும் தர்மம் கேட்டு அறவோர் நிலையைடைந்து சங்கத்தில் சேர்ந்தனர். அப்பொழுதில் இருந்து அறவோர்கள் இவ்வுலக வாழ்வுக்குரிய பொருட்களிடத்து கவலையற்றவர்களாக மாறி தூது குறிப்பினை அறிவிக்கவில்லை.
ஏமாற்றமடைந்த மாமன்னர் இறுதிக் கட்டமாக மற்றுமொரு அரசவையினரும் கௌதம புத்தரின் ஆர்வமிக்க விளையாட்டு தோழருமான க்லுதாயி ( கால உதயணன் ) என்பவரை முழு நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார். அவரும் சங்கத்தில் சேர மாமன்னரின் அனுமதி பெற்றதன் பொருட்டு தன்னுடைய சம்மதம் தெரிவித்து விடைபெற்றுச் சென்றார். மற்றவர்கள் போல் தானும் நல்வாய்ப்பாகச் சங்கத்தில் சேர்ந்து அறவோர் நிலையடையலாமா? என்று சிந்தித்தார். ஆனால், மற்றவர்கள் போல அல்லாமல் இவர் தான் கொண்டு வந்த செய்தியினை கௌதம புத்தரிடம் தெரிவித்து அரச குடும்பத்தைச் சார்ந்த முதிர்ந்த தந்தையிடம் செல்லுமாறு அறிவுறுத்தி இணங்க வைத்தார்.
![]() |
கௌதம புத்தரின் கபிலவத்து நோக்கிய பயணம் |
மாசித் திங்கள் ( Febraury ) பௌர்ணமி
நீண்ட காலம் வெற்றி நடைபோடும் சமய குழுவினால் ( சங்கம் ) புத்தர் தன்னையும் உயர்ந்த குழுவினையும் திருப்தியடையச் செய்தார். புத்தர் 80வது வயதில் கடமைகள் எல்லாம் முடிந்தது என்று உணர்ந்தார். அவர் மெய்யார்வம் கொண்ட சீடர்களாகிய இல்லறத்தார், வீடற்ற நிலையிலுள்ளவர்கட்கும் இன்றியமையாத செயல்துறைக் கட்டளைகளைத் தெளிவுபடுத்தினார். அவர்களும் தன்னுடைய போதனைகளில் உறுதியாகவும் மற்றும் மற்றவர்கட்கும் விவரமாக எடுத்துக்கூறவும் தகுதியடைந்தனர். ஆகையினால் அவர் தன்னுடைய மீத நாட்களை மன உறுதியினால் கட்டுப்படுத்த முடிவு செய்ய விருப்பமில்லாமல் அரகத்தின் முழு ஆதாயம் அனுபவித்து வந்தார்.
மாசித்திங்கள் பௌர்ணமி நாளன்று சாபால சைத்தியம் வசிக்கும் தருணம் புத்தர் இன்று முதல் இன்னும் மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக வணக்கத்திற்குரிய ஆனந்தரிடம் அறிவித்தார்.
வணக்கத்துக்குரிய ஆனந்தர் புத்தர் கூறியதை உடனே நினைவு கொண்டு அவர் எல்லோருடைய நன்மை, செழுமைக்கும் 100 வருடங்கள் வாழும்படி வேண்டினார். புத்தர் தன் பதிலில் "ஆனந்தா, ததாகதரை கெஞ்சிக் கேட்டது போதும். அப்படிப்பட்ட வேண்டுகோளுக்கு இப்போது நேரம் கடந்து விட்டது" என்றார்.
அதன்பிறகு அவர் விரைவில் செல்லும் வாழ்க்கையின் இயற்கை ஆற்றல் பற்றிப் பேசி, வணக்கத்துக்குரிய ஆனந்தருடன் மஹாவன கோபுரமுகடு அரை சென்று வைசாலி அருகாமையிலுள்ள எல்லா பிக்குகளும் ஒன்று கூடும்படி வேண்டுகோள் விடுத்தார். ஒன்று கூடிய பிக்குகளிடம் கீழ்வருமாறு சொற்பொழிவாற்றினார்.
எந்தெந்த உயர் உண்மைகளை நான் விவரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னேனோ அவைகளை நன்கு படித்து செயல்முறையில் பழகிக் கவனம்செலுத்தி இந்த புனித வாழ்க்கை நீடித்து வளரச் செய்யவும், உலகத்திலுள்ள எல்லா உயிரினங்கள் மீதும் கருணையை நிலை நாட்டவும், மக்கள் தெய்வங்கள், பண்பையும் மகிழ்ச்சியடையவும் வளரச் செய்யுங்கள். அந்த உயர்நிலையான உண்மைகள்.
1) சிந்தனையின் 4 ஆதாரங்கள்
2) நன்முயற்சியில் 4 வகைகள்3) சமூக வாழ்வில் ஒருவருக்கு நிறைவு தரும் அறிவு பெற 4 துணைப் பொருட்கள்
4) செயலுரிமை 5 காரணங்கள்
5) ஆன்மிக ஆற்றல் பெற 5 காரணங்கள்
6) அறிவு ஒளிபெற காரணக் கூறுகள்
7) உயரிய எண் வழிப்பாதை
அதன்பிறகு அவர் இறுதி சொற்பொழிவாக இறக்கும் நேரமும் வெளிப்படையாக சங்கத்திற்கு தெரியப்படுத்தினார்.
ஓ! உபாசகர்களே ( பிக்குகளே ) கவனியுங்கள். உங்களிடம் பேசுகிறேன். தோன்றுவனவெல்லாம் அழியும் தன்மையுடையன. விழிப்புடன் உங்கள் விமோசனத்திற்கு முயற்சி செய்யுங்கள். ததாகரின் இறப்பு வெகு தொலைவு இல்லாமல் கூடிய சீக்கிரமே ஏற்படும். இன்றிலிருந்து சரியாக மூன்றாவது மாத முடிவில் ததாகதர் இறப்பார் என்று உறுதிப்படுத்தினார்.
************
நூல் : புத்தரும் முழு நிலவும்ஆசிரியர் : பொறியாளர் ஏ. அசோகன்
வெளியீடு : திரிபீடக தமிழ் நிறுவனம், சென்னை.
பிறை வளர்ந்த கதை…
ஐந்து வருடங்களுக்கு முந்தைய மதியப்பொழுது, சரியாக சொல்வதானால், 2012ம் வருடத்தின் ஜுன் மாதம். அண்ணல் பாபாசாகேப்யையும், அவர் காட்டிய வழியில் பெளத்த நெறியை தேடும் உபாசகர்கள் குடும்பமாக அமர்ந்து, பவுத்தத்தை அறிந்து கொள்ளும் விதமாக, இனி வரும் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் பாபாசாகேப் மணிமண்டபத்தில் குடும்பமாக கூடி, பெளத்த உரையாடலை நிகழ்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அம்முடிவு அடுத்த மாதமே, அதாவது ஜுலை மாதமே செயல் வடிவத்திற்கு வந்தது. இன்று ‛நிலா தம்மா குழு’ என ஒரு முழுநிலவு போல் வளந்திருக்கும் அந்த பெளத்த பண்பாட்டு குழு, தன் வளர்பிறையின் முதல் அடியை இப்படி தான் தொடங்கியது. அப்போதைய நோக்கம் மணிமண்டபத்தில் குடும்பமாகக் கூடுவது மட்டுமே!
வரலாற்றின் எல்லா காலங்களிலும் தவறாமல் நடக்கும் வேடிக்கைகளில் ஒன்று, அதிகாரத்திற்கு எதிர்வினை புரியும் தவிர்க்க முடியாத ஆளுமைகளை, தொடர்ந்து இருட்டடிப்பு செய்வது. பத்தொன்பது, இருபதாம் நுாற்றாண்டின் தன்னிகரில்லா ஆளுமையான அண்ணல் பாபாசகேப் அம்பேத்கரையும், சமத்துவ சமூகத்திற்காக அவர் பின்பற்றிய பெளத்தத்தையும் இந்த 21ம் நுாற்றாண்டில் இருட்டடிப்பு செய்வது. இதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறது, அதிகாரம்!
நாடு முழுவதும் லட்சத்திற்கும் அதிகமாகன சிலைகளை உடைய அத்தலைவனுக்கு முக்கிய நகரங்களில் மணிமண்டபம் கட்டி, அதை பராமரிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது அதிகாரத்தின் இருட்டடிப்பில் ஒரு வடிவம். அப்படி சென்னையில் இருக்கும் மணிமண்டபத்தை, நமக்காக ஆக்கப்பூர்மான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே நிலா தம்மா பவுர்ணமி குழுவின் ஆரம்ப கூடுகையின் நோக்கம்.
நாம் முதல் அடியை எடுத்து வைக்கும் போதே நமக்கான பாதை நம் முன் விரிந்து விடுகிறது. தொடக்கத்தில் கூடுகை என்ற நிலையிலிருந்து மெல்ல பண்பாட்டு தளத்திற்கு நுழைந்தது ‛நிலா தம்மா’. பெண்களும் குழந்தைகளுமே அப்பயணத்தை முன்னெடுக்க தொடங்கினார்கள்.
தங்களுக்கான விடுதலை பாடல்களை தாங்களே எழுதுவது, நாடகங்கள் புனைவது என குழந்தைகள் தங்களை உணர்ந்து விரைவாக வளரத் தொடங்கினர். அதற்கான வலிமையை பெளத்தம் அவர்களுக்கு தந்தது. .
பண்பாட்டு தளத்தில் பயணம் என்று முடிவான பின் அடுத்து எடுத்த தீர்க்கமான முடிவு, ஐந்து லட்சம் மக்களுடன், பாபாசாகேப் பவுத்தம் ஏற்ற, ‛தீக்க்ஷா பூமி’க்கு செல்வதே! நம் வரலாறுகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு வளரும் வளர்ச்சிதான் நீடித்து நிற்கும். அதன்படி, நிலா தம்மா குழு 2015ம் ஆண்டு 32 உபாசகர்களுடன் முதல் முறையாக அப்புண்ணிய பூமிக்கு பயணம் மேற்கொண்டது. அப்பயணம் தந்த படிப்பினை, அடுத்த வருடத்தில் 110 உபாசகர்களுடன் தொடர்ந்தது; இனியும் தொடரும்!
ஆரம்பத்தில் பாடல்கள், நாடகங்கள், கலை நிகழ்வுகள் என விரிந்த நிலா தம்மாவின் பயணம், இன்று வாரந்திர திரையில் என்று காட்சி கலையிலும் கால் பதித்து, பண்பாட்டின் அனைத்து கிளைகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.
பண்பாட்டை மீட்டெடுத்தலே, பெளத்த புரட்சியின் அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ‛நிலா தம்மா குழு’ அதற்காக எடுத்து வைத்திருக்கும் வலிமையான முதல் அடி, ‛கரும்பிடாரி கலைக்குழு’. அக்கினி தெய்வம், கண்ணகியின் மறுஉருவம் என்று சனாதன இந்து மதம் எத்தனை சாயங்கள் பூசினாலும் அம்மூத்த தேவி, எங்கள் குலமுதல்வியே என தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் போரை பறை முழங்குகின்றனர் கலைக்குழு குழந்தைகள்.
சின்ன சின்னதாக எடுத்து வைத்த எங்கள் அடிகளுக்கு வெளியிலிந்து தங்களின் ஆதரவு தந்தவர்கள் ஏராளமானோர். மணிமண்டபத்தின் காவலாளியிலிருந்து, சமூதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவரின் உதவியும் இல்லாமல் இந்த ஐந்து வருட பயணம் சாத்தியம் இல்லை. அந்த எல்லா நல்லுள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எம் பவுத்த வந்தனங்களை உரிதாக்குகிறோம்.
ஜெய்பீம்…! நமோ புத்தாய…!
எழுதாக் கிளவி ( வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள் ) : ஸ்டாலின் ராஜாங்கம்
"தன் வரலாற்றை அறியாதவரால் வரலாறு படைக்க முடியாது" என்கிறார் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர்.
மேலும், "பௌத்தத்துக்கும் பார்ப்பனீயத்திற்குமிடையேயான போராட்டமே இந்தியாவின் வரலாறு" என்கிறார்.
பௌத்தம் இம்மண்ணில் தழைத்தோங்கி கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு என்று அனைத்துத்தளங்களிலும் உச்சத்தைத் தொட்ட இந்தியா அதன் பின்னர் நிகழ்ந்த எதிர்புரட்சியால் வீழ்த்தப்பட்டது பௌத்தம்.
பௌத்தர்கள் பல இன்னல்களுக்குள்ளாகி தங்கள் வரலாறை மறக்கடிக்கப்பட்டு வந்ததின் விளைவாய், பட்டியலினமாகத் தொகுக்கப்பட்டவர்கள் தங்களின் வேர்களான வரலாற்றைத் தொலைத்து தங்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக வளம் வந்தனர், வருகின்றனர்.
ஒரு சமூகத்தை அழிக்க, முடமாக்க வேண்டுமென்றால் அவர்களின் வரலாற்றை அழித்தால் போதும் என்பர். அதுபோல, பட்டியலின மக்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டு, காலம் காலமாய், இப்புவியில் மனிதன் தோன்றியது முதலே ஒடுக்கப்பட்டவர்கள் அவர்கள் என்று ஒருவிதக் கற்பிதத்தை விதைக்கப்பட்டுள்ளது இம்மண்ணில்.
அம்மக்களின் வரலாற்றை மீட்டெடுப்பது பட்டியலின மக்கள் சுயமரியாதையுடன் தங்களின் விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். அத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை பட்டியலின சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் பலர் செய்துவருவது செயற்கரும் செயலாகும்.
அத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஸ்டாலின் ராஜாங்கமும், ஜெ. பாலசுப்பிரமணியமும் ஆவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்ப் பௌத்தம், தமிழக தலித் இயக்க வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து இயங்கிவருபவர்.
![]() |
ஸ்டாலின் ராஜாங்கம் |
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்ப் பௌத்தம், தமிழக தலித் இயக்க வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து இயங்கிவருபவர்.
![]() |
ஜெ. பாலசுப்பிரமணியம் |
ஜெ. பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ( MIDS ) ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தலித் வரலாறு, அரசியல் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
காலச்சுவடு பதிப்பகத்தால் 21 மே 2017ல் "தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம்" உடன் இணைந்துவெளியிட்டப் புத்தகங்கள் :
![]() |
ஜீவிய சரித்திர சுருக்கம் |
"ஜீவிய சரித்திர சுருக்கம்" என்று ராவ் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் வெளியிட்ட புத்தகத்தின் பதிப்பாசிரியராகவும், "எழுதாக் கிளவி"யையும் ஸ்டாலின் ராஜாங்க"ம் வெளியிட்டார் ,
![]() |
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை |
"சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை" எனும் தலைப்பில் 1869 முதல் 1943 வரை வந்த தலித் இதழ்களின் தொகுப்பையும்,
![]() |
பூலோகவியாஸன் |
"பூலோகவியாஸன்"எனும் தலித் இதழின் தொகுப்புகளை எழுத்தாளர் ஜெ. பாலசுப்ரமணியம் தொகுத்தும், பதிப்பித்தும்,வெளியிட்டார்.
*******.
![]() |
எழுதாக் கிளவி |
"எழுதாக் கிளவி" இரண்டு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. அவை "நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" மற்றும் "வாசிப்பில் வசப்படும் வரலாறு".
"நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" ஆறு கட்டுரைகளைச் சுமந்து வருகிறது.
"சிந்து, சிலை, சின்னம்" எனும் முதல் கட்டுரை "ஜாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வராலாற்றை"தாங்கி வருகிறது. 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் நாள் தன்னைத்தாக்க வந்த ஜாதிவெறிக் கூட்டத்தை, ராணுவத்தில் பணிபுரிந்த அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள் கையாண்ட விதத்திலிருந்து தொடங்கி, கக்கன் அவர்கள் பிறந்த ஊரான தும்பைப்பட்டியின் அருகிலிருக்கும் வஞ்சிநகரத்தைச் சார்ந்த V. கந்தன், ரெட்டியூர் பாண்டியன் என்று விரிகிறது இக்கட்டுரை.
"வரலாற்றை வழிமறிக்கும் வெகுமக்கள் நினைவுகள்" எனும் தலைப்பிலான இரண்டாம் கட்டுரையில், ஆனந்த தீர்த்தர், ஜார்ஜ் ஜோஸப், பென்னிகுயிக் ஆகியோரின் செயல்பாடுகளை விவரித்துச் செல்கிறது.
"கக்கன், சிவாஜி சிலைகள்: பணிவும் பெருமிதமும்" எனும் மூன்றாம் கட்டுரை, ஒரே இடத்தில் நிறுவப்பட்ட இருவேறு சமூகம் மற்றும் செயல்பட்ட தளங்களைக் கொண்ட ஆளுமைகள் நினைவுறுத்தப்படும் சமூகத்தின் தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.
"டி. எம். மணி என்றொரு தலித் தலைவர்" எனும் அடுத்தக்கட்டுரை பட்டியலினத்தில் பிறந்து "டி. எம். உமர் பாரூக்" என்று இஸ்லாமை ஏற்றப்பிறகு அறியப்பட்ட ஆளுமையை அவரின் செயல்பாடுகளை விவரித்து செல்கிறது.
'பொன்னுத்தாய் ஸ்கூல்: தலித் கல்வி வரலாற்றில் சொல்லப்படாத இன்னுமொரு கதை" எனும் தலைப்பில் 1952லேயே தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட பள்ளியினைப் பற்றி விவரிக்கிறது ஐந்தாம் கட்டுரை.
"பௌர்ணமி குப்புசாமி: தலித் வரலாற்றின் அறியப்படாத மற்றுமொரு ஆளுமை" எனும் கட்டுரை பௌர்ணமி அவர்களின் செயற்பாடுகளில் முக்கியமானது பௌத்தப் பணிகளென்றும், அவர் "பௌர்ணமி" என்ற பெயரில் மாதமிருமுறை வெளிவரும் இதழை நடத்தியவர் என்ற தகவலும் இச்சமூக மாற்றமென்பது ஒரு தொடரோட்டமே என்பதற்கு அத்தாட்சியாய் உள்ளது.
இக்கட்டுரைகள் அனைத்தும் பெரும்பாலும் எந்தவித பதிவுகளுமின்றி மக்களின் நினைவுகளோடே பயணித்து மீட்டெடுக்கப்பட்டவை. இவற்றிற்காக பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின் ராஜாங்கம்.
இரண்டாம் பிரிவான "வாசிப்பில் வசப்படும் வரலாறு"தனில் முதல் கட்டுரையான "இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்" எனும் கட்டுரை அன்னை மீனாம்பாள் அவர்களின் பங்கும் அதன் மூலம் பட்டியலின மக்களின் பங்கெடுப்பும், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு அணுகப்பட்டனர் என்றும் விவரிக்கின்றது.
"தங்கை வீரம்மாளும் தமையன் வீராசாமியும்" எனும் கட்டுரை பட்டியலினத்தவராய் பிறந்து பாபாசாகேப் கொள்கைகளை ஏற்று நடந்துவரும், சூழலுக்கேற்றவாறு தான் இயங்கும்விதத்தை மாற்றியமைத்துக் கொண்டவறும் பற்றிய ஒரு ஒப்பீடாக, சமூகத்தின் இயக்கத்தை தெளிவாய் விவரித்துச் செல்கிறது.
"கருங்காலிகளும் நன்றி கொன்றவர்களும் : எம்.சி. ராஜாவின் அனுபவங்கள் வழியாக நீதிக்கட்சி, காங்கிரசு பற்றிய சிறு குறிப்புகள்" எனும் கட்டுரை, பட்டியலின மக்கள் படித்தறிய வேண்டிய மிக முக்கியமான கட்டுரை எனலாம். ஏனெனில், இன்றளவும், பொதுப்புத்தியிலும் பட்டியலின மக்களிடமும் எம்.சி.ராஜா அவர்களின் "பூனா ஒப்பந்தம்" சார்ந்த எதிர்மறை நிகழ்வுகளே பரவலாக காணப்படும் காலத்தில், பிற்காலத்தில் அவருள் ஏற்பட்ட மாற்றம் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது போன்றவை தெரிந்தோ, தெரியாமலோ இருட்டடிப்பு செய்ய்யப்படுகிறது.
நீதிக்கட்சியின் வரலாற்றில் "டி. எம். நாயர் கலந்து கொண்ட ஸ்பர்ட்டாங்க் சாலைக் கூட்டம்"தனைப்பற்றி அதன் தாக்கத்தைப் பற்றி விவரிக்கின்றது அடுத்த கட்டுரை.
"நந்தனும் நந்தனாரும் : இருபதாம் நூற்றாண்டு தலித் அரசியல் செயற்பாடுகளைக் கட்டமைத்த இருவேறு போக்குகள்" எனும் கட்டுரை "நந்தன், நந்தனார்" என்று சமூகத்தில் உள்ள கதையாடல்கள் அதன் விளைவுகளை விவரித்துச் செல்கிறது.
இறுதிக் கட்டுரையாக "திராவிடன் பறையன் தமிழன்" எனும் கட்டுரை பெயர்கள் எனும் பொருளைத் தாண்டி சமூக, அரசியல் அடையாளங்களாக நிலைபெற்று தமிழ்நாட்டு சமூக அரசியல் சூழலுக்குள் புரியும் வினையை விவரிக்கின்றது.
********
பட்டியலின மக்களின் வரலாற்றை மீட்கும் அரிய பொக்கிஷமான படைப்புகள் "எழுதாக் கிளவி", "ஜீவிய சரித்திர சுருக்கம்" "பூலோகவியாசன்" மற்றும் "சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை" ஆகும்.
பதிப்பகம் : காலச்சுவடு