"தன் வரலாற்றை அறியாதவரால் வரலாறு படைக்க முடியாது" என்கிறார் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர்.
மேலும், "பௌத்தத்துக்கும் பார்ப்பனீயத்திற்குமிடையேயான போராட்டமே இந்தியாவின் வரலாறு" என்கிறார்.
பௌத்தம் இம்மண்ணில் தழைத்தோங்கி கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு என்று அனைத்துத்தளங்களிலும் உச்சத்தைத் தொட்ட இந்தியா அதன் பின்னர் நிகழ்ந்த எதிர்புரட்சியால் வீழ்த்தப்பட்டது பௌத்தம்.
பௌத்தர்கள் பல இன்னல்களுக்குள்ளாகி தங்கள் வரலாறை மறக்கடிக்கப்பட்டு வந்ததின் விளைவாய், பட்டியலினமாகத் தொகுக்கப்பட்டவர்கள் தங்களின் வேர்களான வரலாற்றைத் தொலைத்து தங்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக வளம் வந்தனர், வருகின்றனர்.
ஒரு சமூகத்தை அழிக்க, முடமாக்க வேண்டுமென்றால் அவர்களின் வரலாற்றை அழித்தால் போதும் என்பர். அதுபோல, பட்டியலின மக்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டு, காலம் காலமாய், இப்புவியில் மனிதன் தோன்றியது முதலே ஒடுக்கப்பட்டவர்கள் அவர்கள் என்று ஒருவிதக் கற்பிதத்தை விதைக்கப்பட்டுள்ளது இம்மண்ணில்.
அம்மக்களின் வரலாற்றை மீட்டெடுப்பது பட்டியலின மக்கள் சுயமரியாதையுடன் தங்களின் விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். அத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை பட்டியலின சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் பலர் செய்துவருவது செயற்கரும் செயலாகும்.
அத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஸ்டாலின் ராஜாங்கமும், ஜெ. பாலசுப்பிரமணியமும் ஆவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்ப் பௌத்தம், தமிழக தலித் இயக்க வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து இயங்கிவருபவர்.
![]() |
ஸ்டாலின் ராஜாங்கம் |
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்ப் பௌத்தம், தமிழக தலித் இயக்க வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து இயங்கிவருபவர்.
![]() |
ஜெ. பாலசுப்பிரமணியம் |
ஜெ. பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ( MIDS ) ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தலித் வரலாறு, அரசியல் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
காலச்சுவடு பதிப்பகத்தால் 21 மே 2017ல் "தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம்" உடன் இணைந்துவெளியிட்டப் புத்தகங்கள் :
![]() |
ஜீவிய சரித்திர சுருக்கம் |
"ஜீவிய சரித்திர சுருக்கம்" என்று ராவ் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் வெளியிட்ட புத்தகத்தின் பதிப்பாசிரியராகவும், "எழுதாக் கிளவி"யையும் ஸ்டாலின் ராஜாங்க"ம் வெளியிட்டார் ,
![]() |
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை |
"சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை" எனும் தலைப்பில் 1869 முதல் 1943 வரை வந்த தலித் இதழ்களின் தொகுப்பையும்,
![]() |
பூலோகவியாஸன் |
"பூலோகவியாஸன்"எனும் தலித் இதழின் தொகுப்புகளை எழுத்தாளர் ஜெ. பாலசுப்ரமணியம் தொகுத்தும், பதிப்பித்தும்,வெளியிட்டார்.
*******.
![]() |
எழுதாக் கிளவி |
"எழுதாக் கிளவி" இரண்டு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. அவை "நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" மற்றும் "வாசிப்பில் வசப்படும் வரலாறு".
"நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" ஆறு கட்டுரைகளைச் சுமந்து வருகிறது.
"சிந்து, சிலை, சின்னம்" எனும் முதல் கட்டுரை "ஜாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வராலாற்றை"தாங்கி வருகிறது. 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் நாள் தன்னைத்தாக்க வந்த ஜாதிவெறிக் கூட்டத்தை, ராணுவத்தில் பணிபுரிந்த அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள் கையாண்ட விதத்திலிருந்து தொடங்கி, கக்கன் அவர்கள் பிறந்த ஊரான தும்பைப்பட்டியின் அருகிலிருக்கும் வஞ்சிநகரத்தைச் சார்ந்த V. கந்தன், ரெட்டியூர் பாண்டியன் என்று விரிகிறது இக்கட்டுரை.
"வரலாற்றை வழிமறிக்கும் வெகுமக்கள் நினைவுகள்" எனும் தலைப்பிலான இரண்டாம் கட்டுரையில், ஆனந்த தீர்த்தர், ஜார்ஜ் ஜோஸப், பென்னிகுயிக் ஆகியோரின் செயல்பாடுகளை விவரித்துச் செல்கிறது.
"கக்கன், சிவாஜி சிலைகள்: பணிவும் பெருமிதமும்" எனும் மூன்றாம் கட்டுரை, ஒரே இடத்தில் நிறுவப்பட்ட இருவேறு சமூகம் மற்றும் செயல்பட்ட தளங்களைக் கொண்ட ஆளுமைகள் நினைவுறுத்தப்படும் சமூகத்தின் தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.
"டி. எம். மணி என்றொரு தலித் தலைவர்" எனும் அடுத்தக்கட்டுரை பட்டியலினத்தில் பிறந்து "டி. எம். உமர் பாரூக்" என்று இஸ்லாமை ஏற்றப்பிறகு அறியப்பட்ட ஆளுமையை அவரின் செயல்பாடுகளை விவரித்து செல்கிறது.
'பொன்னுத்தாய் ஸ்கூல்: தலித் கல்வி வரலாற்றில் சொல்லப்படாத இன்னுமொரு கதை" எனும் தலைப்பில் 1952லேயே தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட பள்ளியினைப் பற்றி விவரிக்கிறது ஐந்தாம் கட்டுரை.
"பௌர்ணமி குப்புசாமி: தலித் வரலாற்றின் அறியப்படாத மற்றுமொரு ஆளுமை" எனும் கட்டுரை பௌர்ணமி அவர்களின் செயற்பாடுகளில் முக்கியமானது பௌத்தப் பணிகளென்றும், அவர் "பௌர்ணமி" என்ற பெயரில் மாதமிருமுறை வெளிவரும் இதழை நடத்தியவர் என்ற தகவலும் இச்சமூக மாற்றமென்பது ஒரு தொடரோட்டமே என்பதற்கு அத்தாட்சியாய் உள்ளது.
இக்கட்டுரைகள் அனைத்தும் பெரும்பாலும் எந்தவித பதிவுகளுமின்றி மக்களின் நினைவுகளோடே பயணித்து மீட்டெடுக்கப்பட்டவை. இவற்றிற்காக பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின் ராஜாங்கம்.
இரண்டாம் பிரிவான "வாசிப்பில் வசப்படும் வரலாறு"தனில் முதல் கட்டுரையான "இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்" எனும் கட்டுரை அன்னை மீனாம்பாள் அவர்களின் பங்கும் அதன் மூலம் பட்டியலின மக்களின் பங்கெடுப்பும், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு அணுகப்பட்டனர் என்றும் விவரிக்கின்றது.
"தங்கை வீரம்மாளும் தமையன் வீராசாமியும்" எனும் கட்டுரை பட்டியலினத்தவராய் பிறந்து பாபாசாகேப் கொள்கைகளை ஏற்று நடந்துவரும், சூழலுக்கேற்றவாறு தான் இயங்கும்விதத்தை மாற்றியமைத்துக் கொண்டவறும் பற்றிய ஒரு ஒப்பீடாக, சமூகத்தின் இயக்கத்தை தெளிவாய் விவரித்துச் செல்கிறது.
"கருங்காலிகளும் நன்றி கொன்றவர்களும் : எம்.சி. ராஜாவின் அனுபவங்கள் வழியாக நீதிக்கட்சி, காங்கிரசு பற்றிய சிறு குறிப்புகள்" எனும் கட்டுரை, பட்டியலின மக்கள் படித்தறிய வேண்டிய மிக முக்கியமான கட்டுரை எனலாம். ஏனெனில், இன்றளவும், பொதுப்புத்தியிலும் பட்டியலின மக்களிடமும் எம்.சி.ராஜா அவர்களின் "பூனா ஒப்பந்தம்" சார்ந்த எதிர்மறை நிகழ்வுகளே பரவலாக காணப்படும் காலத்தில், பிற்காலத்தில் அவருள் ஏற்பட்ட மாற்றம் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது போன்றவை தெரிந்தோ, தெரியாமலோ இருட்டடிப்பு செய்ய்யப்படுகிறது.
நீதிக்கட்சியின் வரலாற்றில் "டி. எம். நாயர் கலந்து கொண்ட ஸ்பர்ட்டாங்க் சாலைக் கூட்டம்"தனைப்பற்றி அதன் தாக்கத்தைப் பற்றி விவரிக்கின்றது அடுத்த கட்டுரை.
"நந்தனும் நந்தனாரும் : இருபதாம் நூற்றாண்டு தலித் அரசியல் செயற்பாடுகளைக் கட்டமைத்த இருவேறு போக்குகள்" எனும் கட்டுரை "நந்தன், நந்தனார்" என்று சமூகத்தில் உள்ள கதையாடல்கள் அதன் விளைவுகளை விவரித்துச் செல்கிறது.
இறுதிக் கட்டுரையாக "திராவிடன் பறையன் தமிழன்" எனும் கட்டுரை பெயர்கள் எனும் பொருளைத் தாண்டி சமூக, அரசியல் அடையாளங்களாக நிலைபெற்று தமிழ்நாட்டு சமூக அரசியல் சூழலுக்குள் புரியும் வினையை விவரிக்கின்றது.
********
பட்டியலின மக்களின் வரலாற்றை மீட்கும் அரிய பொக்கிஷமான படைப்புகள் "எழுதாக் கிளவி", "ஜீவிய சரித்திர சுருக்கம்" "பூலோகவியாசன்" மற்றும் "சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை" ஆகும்.
பதிப்பகம் : காலச்சுவடு